பிரபலமான இடுகைகள்

Translate

வெள்ளி, 18 மே, 2018

பாவேந்தரும் தமிழியக்கமும் முனைவர் க.தமிழமல்லன்


பாவேந்தரும் தமிழியக்கமும்
முனைவர் க.தமிழமல்லன்
முத்துக் கடலின் மூளும் ஆற்றல்                                                     கொத்துக் குண்டின் குன்றா வலிமை!                                                  எரிமலை கக்கும் இணையிலா வெப்பம்,   
வரிப்புலிச் சீற்றம் அரிமாப் பெருமிதம்!                                      அனைத்தும்நிறைந்த அடுக்கிடி முழக்கம்                                               முனைப்பாய் பாவேந்தர் மூள்தமிழ் இயக்கம்! 
அறுசீர் மண்டில அழகிய யாப்பால்,                                                      உறுதமிழ் நலமெலாம் உடனே விளைந்திடப்                                     படைத்தது, படைக்கலம் போன்றது! பகைத்திறம்                               
உடைத்தே, உயிர்த்தமிழ் காத்தது! பாட்டின்                                                வேந்தர் வில்லின் கணையாய் விளைத்தது!                                              மாந்தர் யாவரும் மண்தமிழ் காக்கத் 
துாண்டித் துாய்தமிழ் துலங்கிட வைத்தது!                                     
வேண்டிய மாற்றம் விளைந்த(து)! அதனால்,                               
மார்க்சின் முதல்நுால் மாற்றம் தந்தது,                                           வேர்த்தமிழ் காக்கும் விளைதமிழ் இயக்கம்                                        அளித்தது! அதனால் அன்னைத் தமிழின் 
இளிவெலாம் தொலைந்தது! இங்குள கடைகள் 
பெயரெலாம், தனித்தமிழ் பேசிட வைத்தது!                                   
உயர்தமிழ்த் திருமணம் உருப்பட வைத் தது!                                                

பாட்டுத் தமிழும் பண்சிறந் தொளிர்ந்தது!                                            வேட்டு வைத்தது வேற்றின வேரிலே! 27.3..2018

வியாழன், 24 டிசம்பர், 2015

மழையே! 2015 திசம்பரில் பொழிந்த பெருமழை சென்னையில் விளைத்த கேடுகளைத் தாங்க இயலா ஓர் ஏழையின் குரல்

மழையே !
முனைவர் க.தமிழமல்லன், 9791629979

மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால்                                                           
மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை!                                                    
மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய்,                                                         
மயக்கிடும் திருடன் புகுவது போலே!                                                          
மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட,                                                                     
 மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய்,                                         
ஏரியைத் திறந்தாய்,ஏழையர் வாட,                                                                      
மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை,                                                                  
குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்!                                                      

நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே?                                                       
மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர்                                                                         
என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்?                                                          
பேருந் தில்லை, சிற்றுந் தில்லை!                                                                      
யாரும் பணத்தை எடுத்திட வழியிலை !                                                                                
கன்னெய் இல்லை, கவலையைச் சொல்ல,                                                             
மின்னும் செல்லிடப் பேசியும் இல்லை !                                                                  
எல்லாம், மழையே உன்னால் ஒழிந்தன!                                                                    
செல்வச் செழிப்பாய்ச் சேமிப் பிருந்தும்,                                                                   
இல்லா தவராய் எங்களைச் செய்தாய்!                                                                    
இல்லை என்றே ஏங்கிட வைத்தாய்!                                                                   
அழைப்பில் லாமல்  அயலான் போல்நீ?                                                         
இழைத்தாய் துன்பம், எப்போ தொழிவாய்?                                                         
பிணம்பு தைப்ப தற்கும் இடந்தான் எங்கே?                                                           
பிணம்எரிப் பதற்கும் எங்கே போவது ?                                                             
பாலம் உடைத்த பாழும் மழையே,                                                                     
ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ!                                                                    
ஓய்ந்து போய்விடு! ஒழிந்திடு! வெயில்தான்,                                                              
காய்ந்திட வழிவிடு! மாய்ந்திடு உடனே !


முனைவர் க.தமிழமல்லன் பற்றிய மு.இளங்கோவன் முகநுாலில் கூறுவது
புதுச்சேரி என்றதும் தமிழ் அன்பர்களுக்குப் பாரதியாரும், பாரதிதாசனும் நினைவுக்கு வருவார்கள். அதுபோல் தனித்தமிழ் அன்பர்களுக்குப் புதுச்சேரி என்றதும் நினைவுக்கு வரும்பெயர் முனைவர் க. தமிழமல்லன் ஆகும். முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவாறு பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்டுரை, பாவியம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, இதழியல் சார்ந்து செயல்பட்டுவருபவர். வெல்லும் தூய தமிழ் என்ற இதழினைக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொய்வின்றி நடத்தி வருபவர். புதுச்சேரியில் சிலப்பதிகார விழா நடத்தித் தமிழ் இலக்கியப்பணிபுரிபவர். எழுத்திலும், பேச்சிலும் எப்பொழுதும் தூயதமிழைப் பயன்படுத்துபவர்.

முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி என்ற பகுதியில் பிறந்தவர். பெற்றோர் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க. தனலட்சுமி ஆவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 33 நூல்களை எழுதியுள்ளார். மலேசியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர்.

 முனைவர் க.தமிழமல்லன்    பெற்ற விருதுகள்
                              
1.செந்தமிழ்ச் செம்மல்விருது       
2.இலக்கியச் செம்மல் 
3.செந்தமிழ்க் காவலர்  
4.பா(கவிதை)ப் போட்டியில் பரிசு 
5.சென்னைப் புதுயுகம்  என்னும் அமைப்பின் பாராட்டு                 
6.தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச்
சென்னையில் 3 நாள்கள் சாகும்வரைபட்டினிப்போர்” 
மேற்கொண்டதற்காக, சென்னை, தமிழ்ச்சான்றோர்பேரவை           
 7.புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு                            
 8.சிறுவர்இலக்கியச் சீர்மணி                                         
9.குழந்தை எழுத்தாளர் சங்கம் பாராட்டு                           
10.தமிழ்மணி விருது  
11.புதுவைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு                                                     
12.பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப்
பாராட்டு,  
13.சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருது,
  14.தமிழ்இலக்கிய மாமணி விருது                                     
15.பாவேந்தர் மரபுப் பாவலர் விருது                      
16.மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது
17.பாவாணர் கொள்கை பரப்புநர் விருது                                   
18.திருவனந்தபுரம்,-தமிழ்ச்சங்கம் பாராட்டு                                
19.சேலம் தமிழ்மன்றம் பாராட்டு                    
 20.உலகத்திருக்குறள் மையம் பாராட்டு
21.தனித்தமிழ்க் காவலர் விருது


 முனைவர் க.தமிழமல்லன்    இலக்கிய அமைப்புகளின் வாயிலாக
 முழுநேரமும் உழைத்து  ஆற்றிய பணிகள் 

1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை 
என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது. 
2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது. 
3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது. 
4. புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு 
ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது. 
5. புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதைவலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
6. இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது.  மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது. 
7. உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984 
8. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது. 
9. புலவர் கீரன்  தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதை எதிர்த்துப் போராடியது. 
10. ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச்  சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது. 
11. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால்எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.                                                                                                                                                                      
12 .புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது. 

13. தமிழ்வழிக்கல்விக்காகத் தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்துநடத்தியது. அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது. 

14. தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் சாகும்வரை பட்டினிப்போரில்”  கலந்து கொண்டது.3 நாள்கள் பட்டினியாய் இருந்தது. 

15. பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்ச் சொற்பொழிவு நடத்தியது.

16. புதுச்சேரிப் பாவேந்தர்  சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.

17. தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித்துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது.

18. தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள்அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது. 

19. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்றுபெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது. 

20. பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல். 

21.கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை இருபத்தொரு நாள்கள் செய்தது. அதன் விளைவாகக்கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன. 
22. ஆண்டு தோறும் தனித்தமிழ் வளர்ச்சிக்காகத் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி ஒன்றையும் முனைவர் க.தமிழமல்லன் நடத்தி வருகிறார்.

முனைவர் க.தமிழமல்லன் தனித்தமிழ்க் கொள்கை வளர்ச்சிக்காக இதுவரை 41 நுால்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருது, நேரு சிறுவர் இலக்கிய விருது, முதலிய விருதுகள் இவர் எழுதிய நுால்களுக்குக் கிடைத்துள்ளன.                                                                                                       

 தொடர்பு முகவரி:
முனைவர் க.தமிழமல்லன்      அவர்கள் 
தலைவர்,தனித்தமிழ் இயக்கம்,தலைவர்,புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்      
ஆசிரியர் - வெல்லும் துாயதமிழ், தொலைபேசி 0413-2247072       
66, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி -605 009